திடீரென பற்றி எரிந்த கார் - திண்டுக்கல்லில் பரபரப்பு!
Updated:
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம் சி.ஆர்.பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் , இவர் இசை ஆசிரியராக உள்ளார். இவர் தனது மாமனார் ஊரான பட்டிவீரன்பட்டிக்கு வருகை தந்துள்ளார். இன்று திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் நண்பரை சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது தனது காரை சாலையோரம் நிறுத்திவிட்டுச் சென்ற, சிறிது நேரத்திலேயே காரின் முன்பக்கம் உள்ள இன்ஜினில் இருந்து திடீரென புகை வர தொடங்கியுள்ளது.
சிறிது நேரத்தில் புகை அதிகமாகி தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுதொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். சாலையோரம் நின்றிருந்த கார் திடீரென பற்றி எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பம் குறித்து விசாரனை நடத்திய திண்டுக்கல் நகர மேற்கு காவல்நிலைய போலீசார், வண்டியின் முகப்பு விளக்கு எரிந்து கொண்டே இருந்ததன் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.