நாகை துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்; 3வது நாளாக மீனவர்கள் தவிப்பு!
Updated:
மாண்டஸ் புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் 2ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், காரைக்காலுக்கு கிழக்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கி.மீ. தூரத்தில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 9ம் தேதி நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எனவே கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், நாகை மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நாகை அக்கரைப்பேட்டை, செருதூர் வேளாங்கண்ணி, நாகூர், உள்ளிட்ட மாவட்டம் முழுவதுமுள்ள 25 மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
சுமை தூக்குவோர், ஐஸ் உடைப்போர், சிறு குறு மீன் விற்பனையாளர்கள் என மீன்பிடி தொழில்சார்ந்த ஆயிரக்கணக்கானோர் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.