மின் ஒயரை அறுத்துச் சென்ற கன்டெய்னர் லாரி.. சினிமா பாணியில் விரட்டி சென்ற இளைஞர்கள்; இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Updated:
விராலிமலையில் சாலையின் குறுக்கே சென்ற மின் வயரை மோதி சென்ற கண்டெய்னர் லாரியை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் துரத்திச் சென்ற போது விராலிமலை- மதுரை சாலை ராமகவுண்டம்பட்டி எனும் இடத்தில் பள்ளத்தில் இறங்கியதில் அதிர்ச்சியில் ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து மதுரைக்கு டிராக்டர்களை ஏற்றுவதற்காக உத்திர பிரதேச மாநில பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரி விராலிமலை அருகே உள்ள கல்குடி வழியாக சென்றது. லாரியை உத்திரப்பிரதேச மாநிலம் சபியுல்லா மகன் சகீர் அகமத் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கண்டெய்னர் லாரி விராலிமலை காமராஜர் நகர் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே சென்ற மின் ஒயர் மீது உரசியுள்ளது. ஆனால் மின் ஒயர் அருந்ததை கவனிக்காமல் லாரியை ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சில, இருசக்கர வாகனத்தில் சினிமா பாணியில் சேசிங் செய்து சென்றுள்ளனர். முருகன் கோவில் மலை அடிவாரத்தில் அந்த கண்டெய்னர் லாரியை மறித்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் வாக்குவாதம் முற்றியதில் அவர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக கண்டெய்னர் லாரியை சகீர் அகமத் வேகமாக விராலிமலை- மதுரை சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார். ராமகவுண்டம்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
இதில் லாரி ஓட்டுனர் சகீர் அகமத் அதிர்ச்சியில் வலிப்பு வந்து உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த விராலிமலை போலீசார் லாரியை துரத்தி சென்ற அசோக்குமார் மகன் ஹரிஹரன், ஆறுமுகம் மகன் ரவிச்சந்திரன், செபஸ்டின் மகன் ஆரோக்கிய ஜார்ஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.