இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கோவில் நிலநல் ஆக்கிரமில் இருந்து மீட்கப்பட்டன. அவ்வாறு ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துக்கள் விவரம் அடங்கிய தொகுப்பை புத்தகமாக தயரிட்டு வெளியிட்டுள்ளனர். அந்த புத்தகத்தை, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் இந்த புத்தகத்தை அமைச்சர் சேகர்பாபு பெற்றுக் கொண்டார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில்களின் சொத்துக்கள் அனைத்தையும் தொகுத்து அழியாத ஆவணங்களாக அச்சுப் பிரதிகளாக அனைவரும் அறிந்து கொள்வதற்காக வெளிப்படைத் தன்மையுடன் இந்நூல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நூலில், கடந்த ஆண்டு மே 7ம் தேதி முதல் கடந்த மார்ச் 31ம் தேதி வரை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோயில் சொத்துக்களின் விவரம், கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோவில் நிலம், மனை, கட்டடம், திருக்குளம் விவரங்கள் ஆகியவை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் திருக்கோயில்களின் சொத்துக்களை பாதுகாக்க இந்நூல் அடிப்படை ஆதாரமாக விளங்கும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளதாகவும், அத்தகவல்கள் நூலாக்கம் பெற்று ஆவணமாகியுள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடக்கம்தான் என்றும் எஞ்சியுள்ள கோயில் சொத்துகளையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுக் கோயில் நிர்வாகங்களிடம் ஒப்படைப்போம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…