தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்பிசி) பிரிவில் திருநங்கைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி திருநங்கைகள் அமைப்பைச் சேர்ந்த சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சுதா தனது மனுவில் திருநங்கைகளுக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியபோதிலும், இதுவரை தங்களுக்கு எந்தவொரு நலத்திட்ட உதவிகளும், இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதைப் போல் திருநங்கை சமூகத்தினருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் திருநங்கைகள் எம்பிசி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேநேரம் திருநங்கைகள் எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தினராக இருந்தால் அதே பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், பெண்ணாக சான்றிதழ் அளிக்கும்பட்சத்தில் பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் வழங்கப்படும் என்று அரசு பிறப்பித்த உத்தரவை சண்முகசுந்தரம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதையடுத்து அரசின் விளக்கத்தை ஏற்று நீதிபதிகள் சஞ்சய் பண்டாரி மற்றும் மாலா வழக்கை முடித்து வைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…