குவாட் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகம் எதிர்கொண்டுவரும் சவால்களில் இருந்து காக்க புத்தர் காட்டிய வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய பெருங்கடல் பகுதியில் வளர்ந்து வரும் சீன வல்லாதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து குவாட் கூட்டமைப்பை தொடங்கியுள்ளன. இதன் 2 நாள் உச்சி மாநாடு ஜப்பானில் நடக்கிறது. இதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியர்கள் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான நட்புநாடுகள் என்றும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பானிய முதலீடுகள் முக்கியப் பங்காற்றியுள்ளன என்றும் பிரதமர் நரேந்திர மோடி அப்போது தெரிவித்தார். அவர் மேலும், "இன்றைய உலகம் புத்தபெருமான் காட்டிய வழியை பின்பற்ற வேண்டும். வன்முறை, அராஜகம், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் என இன்று உலகம் எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து மனிதகுலத்தை காப்பாற்றுவதற்கான வழி இதுதான்.
எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் இந்தியா எப்போதும் தீர்வைக் கண்டறிந்துள்ளது என்று குறிப்பிட்ட மோடி, கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது, நிச்சயமற்ற சூழல் இருந்தது, ஆனால் அந்த சூழ்நிலையிலும், இந்தியா தனது கோடிக்கணக்கான குடிமக்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வழங்கியது. மேலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பியது.
நான் ஜப்பானுக்கு வரும் போதெல்லாம், உங்கள் பாசத்தை நான் காண்கிறேன். உங்களில் பலர் பல ஆண்டுகளாக ஜப்பானில் குடியேறி ஜப்பானிய கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இருப்பினும், இந்திய கலாச்சாரம் மற்றும் மொழி மீதான அர்ப்பணிப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது." என்று பாரத் மாதா கி ஜெய் கோஷங்களுக்கு மத்தியில் கூறினார்.
இதைத் தவிர ஜப்பானிய நிறுவனங்களின் சிஇஓக்களுடன் சந்திப்பை நடத்திய பிரதமர் மோடி, குவாட் உச்சி மாநாட்டில் பங்குகொள்வதோடு, குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் இதர மூன்று நாடுகளின் தலைவர்களுடனும் தனித்தனியாக உரையாடல்களை மேற்கொள்ள உள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…