Nandhinipriya Ganeshan August 24, 2023
குரு பெயர்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்தது. மேஷ ராசியில் ராகு உடன் குரு கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 05 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மேஷ ராசியிலேயே குரு வக்ரமடையப்போகிறார். குரு பகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 இடங்களை பார்வையிடுகிறார். பொதுவாக குரு பகவான் ராசியில் அமரும்போதோ அல்லது 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் அமரும் போதோ முதல்தர குரு பலம் வந்துவிட்டதாக கூறப்படும். அதேபோல், 3, 8, 10 ஆகிய இடங்களில் அமரும் போது இரண்டாம் தர குரு பலம் வந்துவிட்டதாக கூறப்படும். அந்தவகையில், இந்த வக்ர குரு பெயர்ச்சியின் மூலமாக மீனம், மிதுனம், மேஷம், துலாம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான குருபலம் கூடிவந்துள்ளது. இதனால் சிங்கிள்ஸ் ஆக இருந்த இந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் யோகம் கூடிவரப்போகிறது. அதேபோல புத்திர பாக்கியமும் தேடி வரப்போகிறது. மேலும் என்னென்ன பலன்களை தரப்போகிறார் என்பதை பார்க்கலாம். மேஷம்: உங்க ராசியில் ஜென்ம குருவாக அமரும் குரு பகவான், உங்க ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால், மேஷ ராசியினருக்கு திருமணம் கைகூடி வரும். எப்போதும் சண்டை, சச்சரவுமாக இருந்த திருமணம் வாழ்க்கையில் அன்பும், பாசமும் அதிகரித்து உறவு உற்சாகமடையும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தனுசு: உங்க ராசிக்கு குரு பகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்து ஒன்பதாம் பார்வையாக உங்க ராசியை பார்வையிடுகிறார். இதை குடும்ப குரு என்பார்கள். இதனால், குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். தசாபுத்தி நன்றாக இருந்தால் திருமண யோகமும் கை கூடி வரும். அதேப்போல புத்திர பாக்கியமும் கிடைக்கப் போகிறது. துலாம்: உங்க ராசிக்கு குரு ஏழாம் இடத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் மனதிற்குப் பிடித்த மனைவி அமைவார். கணவன் மனைவி இடையே இருந்த பிரிவினை நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு பூர்வ ஜென்ம புண்ணியத்தின்படி மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். மிதுனம்: குருபகவான் மிதுனம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து ராசிக்கு 3, 5, 7ஆம் இடங்களை பார்வையிடுகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டை களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இதுவரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். மேலும், திருமணம் ஆகியும் நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். சிலருக்கு காதலன்/காதலியையே வாழ்க்கைத் துணையாக அமைய வாய்ப்புள்ளது. சிம்மம்: பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால், மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும், குடும்ப சூழ்நிலையால் இதுவரை பிரிந்திருந்த கணவன், மனைவி மீண்டும் ஒன்று சேருவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. ஒருதலையாக காதலித்தவந்தவர்களுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும்.
Nandhinipriya Ganeshan August 23, 2023
வியாழன் கிரகம் தான் தேவர்களின் குரு என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குருபகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக குறைந்தது 12 மாதங்களாவது எடுத்துக் கொள்வார். அந்தவகையில், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதுவரை மேஷ ராசியில் நேர்கதியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் வருகின்ற செப்டம்பர் 05 ஆம் தேதி முதல் வக்ர கதியில் பயணம் செய்ய இருக்கிறார். அதாவது, பின்னோக்கி நகரப்போகிறார். இதை தான் வக்ர பெயர்ச்சி என்பார்கள். டிசம்பர் 31 ஆம் தேதி வரை வக்ர கதியிலேயே பயணம் செய்ய இருக்கிறார். வக்ர நிவர்த்தியும் அதே தேதியில் தான் வரும். அந்த வகையில், கிட்டத்தட்ட 115 நாட்கள் குரு பகவான் வக்கிரகதியிலேயே பயணம் செய்கிறார். இப்படி வக்கிர கதி நிலை அடையும் போது ஒரு கிரகம் தான் கொடுக்க வேண்டிய பலனுக்கு அப்படியே எதிராக கொடுக்க நேரிடும். அதாவது சுப கிரகம் நன்மை செய்வதற்குப் பதிலாக கெடு பலன் கொடுப்பது அல்லது எந்த பலனும் தராமல் போதல் நிகழ்வும், அசுப கிரகம் நல்ல பலன்கள் தரக் கூடிய நிலை கூட இருக்கும்.
Nandhinipriya Ganeshan July 24, 2023
ஜோதிடத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுவது நட்சத்திரங்கள் தான். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு பலம் அதிகம். பொதுவாக நமது பிறந்த ஜாதகமானது நாம் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் அமைகிறது. அந்தவகையில், மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்ட கல் இருக்கின்றன. அவற்றை நம் கைவிரல்களில் அணியும்போது அவை நமக்கு கூடுதல் பலம் தந்து நமக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி, நம்மை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். அந்தவகையில், எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த அதிர்ஷ்ட கல் அணியவேண்டும் என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 27 நட்சத்திர அதிர்ஷ்ட கற்கள்: 1. அசுவினி - வைடூரியம் 2. பரணி - வைரம் 3. கார்த்திகை - மாணிக்கம் 4. ரோகிணி - முத்து 5. மிருகசீரிடம் - பவளம் 6. திருவாதிரை - கோமேதகம் 7. புனர்பூசம் - புஷ்பராகம் 8. பூசம் - நீலம் 9. ஆயில்யம் - மரகதம் 10. மகம் - வைடூரியம் 11. பூரம் - வைரம் 12. உத்திரம் - மாணிக்கம் 13. அஸ்தம் - முத்து 14. சித்திரை - பவளம் 15. சுவாதி - கோமேதகம் 16. விசாகம் - புஷ்பராகம் 17. அனுஷம் - நீலம் 18. கேட்டை - மரகதம் 19. மூலம் - வைடூரியம் 20. பூராடம் - வைரம் 21. உத்திராடம் - மாணிக்கம் 22. திருவோணம் - முத்து 23. அவிட்டம் - பவளம் 24. சதயம் - கோமேதகம் 25. பூரட்டாதி - புஷ்பராகம் 26. உத்திரட்டாதி - நீலம் 27. ரேவதி - மரகதம்
Nandhinipriya Ganeshan July 24, 2023
பொதுவாக ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் இணைக்கும் இந்த அற்புதமான திருமண பந்தத்தை மேலும் சிறப்பாக்குவதற்காக திருமணத்தின் போது 16 பொருத்தங்கள் பார்க்கப்படும். அவற்றில் குறைந்தது ஐந்து பொருத்தமாவது சரியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அந்த தம்பதியின் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும் என்கிறது ஜோதிடம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொருத்தங்களில் இந்த பெயர் பொருத்தம் பார்ப்பதும் ஒன்று. பொதுவாக, இந்த பெயர் பொருத்தமாவது ஆணுக்கோ பெண்ணுக்கோ ஜாதகம் இல்லாத பட்சத்தில் பார்க்கப்படுகிறது. தற்போது இந்த பதிவில் திருமண பெயர் பொருத்தம் பார்ப்பது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம். கல்யாண பெயர் பொருத்தம் பார்ப்பது எப்படி? திருமண பெயர் பொருத்தம் என்பது பெயர்களை வைத்து பொருத்தம் பார்ப்பது. அதாவது ஒருவரின் முதல் எழுத்தையும், அவருடைய துணையாக வர உள்ளவர் பெயரின் முதல் எழுத்தையும், அதற்கான நட்சத்திரத்தையும் வைத்து பார்ப்பதாகும். ஆனால், பெயரை பொருத்தத்தை வைத்து திருமணம் செய்வது என்பது மிகவும் தவறானது. ஏனென்றால், அந்த காலத்தில் நட்சத்திரத்தின் அடிப்படையில் அதற்கான முதல் எழுத்துக்களை வைத்து பெயர் வைத்தார்கள். ஆனால் தற்போதுள்ள காலத்தில் ஒருவரின் பெயருக்கும் அவரின் நட்சத்திரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. ஏனென்றால், அவர்களுக்கு பிடித்த அல்லது எண் கணித அடிப்படையில் அல்லது குல தெய்வ பெயர் வைத்துக் கொள்கின்றனர். இப்படி வைக்கும்போது அவரின் பெயருக்கும் அவருக்கான நட்சத்திரத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அதனால், இந்த காலத்தில் பெயர் பொருத்ததை அடிப்படையாக கொண்டு திருமணம் செய்வது மிகவும் தவறு. ஒருவேளை ஜாதகம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஜோதிடரை அணுகி அதற்கான வேறு வழிகள் என்ன என்பதை ஆலோசித்து திருமணம் செய்யலாமே தவிர, பெயர் பொருத்தத்தைப் பார்த்து திருமணம் செய்வதை தவிர்க்கவும்.
Nandhinipriya Ganeshan July 17, 2023
ஜோதிட ரீதியாக ஒருவருக்கு பிறந்த தேதி மற்றும் பிறந்த நட்சத்திரம் போன்று பிறந்த கிழமையும் அதிமுக்கியமானது. ஏனென்றால், ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொருவிதமான குணம் இருக்கும். அந்தவகையில், குறிப்பிட்ட கிழமையில் பிறந்த நபர்களது குணநலன்கள் அவர்களுக்கு உண்டான பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களின் பலன்கள்: சூரிய பகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி பெறாமல் ஓயமாட்டார்கள். அதாவது, அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் போராடி வென்றுவிடுவார்கள். எதிலும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான குணமுள்ளவர்களாக இருப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்களுக்கு போட்டி மனப்பான்மை, ஆளுமைத்திறன் அதிகமாகவே இருக்கும். இவர்கள், சொல்வதைத்தான் செய்வார்கள் செய்வதைதான் சொல்வார்கள். கடினமான பணிகளையும் அசால்ட்டாக செய்யக்கூடியவர்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் அதிகமாகவே இருக்கும். அதிர்ஷ்ட தேதிகள்: ஞாயிற்றுக்கிழமையுடன் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் இணைந்திருக்கும் இந்த நாட்களில் எந்த புதிய முயற்சி எடுத்தாலும் வெற்றி கிட்டும். திங்கட்கிழமை பிறந்தவர்களின் பலன்கள்: தன்னுடைய நகைச்சுவையான பேச்சு திறமையால் மற்றவர்கள் மனதில் எளிதில் இடம்பிடித்துவிடுவார்கள். பொறுமையின் சிகரமே என்றே சொல்லலாம். இளகிய மனம் கொண்ட இவர்கள் மற்றவர்களுக்கு தேடிப்போய் உதவி செய்வார்கள். எதிரிகளைக்கூட நண்பர்களாக கருதுவார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட நண்பர்களுடன் பொழுதுபோக்குவதில்தான் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். தர்மம், நியாயம் போன்ற விஷயங்களை கடைபிடிப்பவர்கள். கற்பனை திறன் அதிகமாகவே இருக்கும். இதுதான் அவர்களின் சொந்த தொழிலுக்கும் பேருதவியாக இருக்கும். குளிர்ச்சியான தேகம் உடையவர்கள். அதிர்ஷ்ட தேதிகள்: திங்கட்கிழமையுடன் 2, 7, 11, 16, 20, 25 ,29 ஆகிய தேதிகள் இணைந்திருக்கும் இந்த நாட்களில் புதிய தொழில் தொடங்குதல், சுப நிகழ்ச்சிகள் செய்வது, பொன், பொருள் வாங்குவது போன்றவற்றை செய்வது சிறப்பு. செவ்வாய் கிழமை பிறந்தவர்களின் பலன்கள்: செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் வம்புசண்டைக்குப் போக மாட்டார்கள். ஆனால், வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுபவர்கள் என்று சொல்லலாம். இருந்தாலும் சாதாரண விஷயத்திற்கும் அதிகளவு உணர்ச்சிவசப்படுவார்கள். ஆனால் கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்பது போல் இவர்களாகவே வலிய வந்து ஸ்நேகமாகி விடுவார்கள். நல்லவர்களுக்கு நல்லவர் கெட்டவர்களுக்கு கெட்டவராக திகழ்வார். அதனாலேயே பலருக்கும் இவரைப் பிடிக்காது ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அதிர்ஷ்ட தேதிகள்: செவ்வாய் கிழமையுடன் 9, 18 ,27 ஆகிய தேதிகள் இணைந்திருக்கும் இந்த நாட்களில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும். புதன்கிழமை பிறந்தவர்களின் பலன்கள்: இந்தக் கிழமைகளில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளியாக திகழ்வார்கள். எப்போது பார்த்தாலும் எதையாவது எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருப்பார்கள். தங்களுக்குத் தேவை இல்லையென்றாலும்கூட, அதை அறிந்து வைத்துக்கொள்வதில் அதிகம் ஆர்வமுள்ளவர்கள். இயல்பிலேயே கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருப்பார்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுத்துத்தான் பழகும் குணம் உடையவர். இருப்பினும், பழகிவிட்டால் நட்புக்காக உயிரையும் கொடுப்பார்கள். ரகசியம் காப்பதில் வல்லவர் மற்றவர்களின் மனதில் உள்ளதைத் துல்லியமாக அறிந்து அதற்கேற்ப செயல்படுவார்கள். காரியம் நடந்துமுடிய வேண்டும் என்ரால் அதற்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். அதிர்ஷ்ட தேதிகள்: புதன் கிழமையுடன் 5,14,23 ஆகிய தேதிகள் இணைந்திருக்கும் இந்த நாட்களில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும். வியாழக்கிழமை பிறந்தவர்களின் பலன்கள்: வியாழக்கிழமையில் பிறந்தவர்கள், நன்நெறிகளுக்கு இருப்பிடமாகத் திகழ்வார்கள். அதனால், இவர்கள் பெரும்பாலும் தேவையில்லாத பிரச்னைகளில் அத்தனை எளிதாகச் சிக்கமாட்டார்கள். மற்றவர்களை போற்றத்தக்க குணம் கொண்டவர்களாக இருக்கும் இவர்கள், குறுக்கு வழியில் செல்பவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவார்கள். உதவி செய்யும் குணம் அதிகமாகவே இருக்கும். எந்த துறையில் ஈடுபட்டாலும் நிச்சயம் முன்னேற்றம் அடைவார்கள். இருந்த இடத்திலிருந்துகொண்டே எல்லா விஷயமும் அறிந்தவர்களாக இருப்பார்கள். இதனால் சிலர் இவரைக் கர்வம் பிடித்தவர் என்றுகூட நினைப்பதுண்டு. அதிர்ஷ்ட தேதிகள்: வியாழக்கிழமையுடன் 3, 12, 21, 30 ஆகிய தேதிகள் இணைந்திருக்கும் இந்த நாட்களில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும். வெள்ளிக் கிழமை பிறந்தவர்களின் பலன்கள்: இந்த கிழமையில் பிறந்தவர்கள் நல்ல பேச்சாற்றல் கொண்டவராக இருப்பார்கள். கலைத்துறையில் அதிக நாட்டம் கொண்டவர்கள். சமர்த்துப் பிள்ளை என்று பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். பேச்சாலேயே மற்றவர்களை தன்வயப்படுத்துவார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவர்கள். அதனால், தங்கள் மனதுக்கு எது பிடிக்கின்றதோ அதை எந்தச் சூழ்நிலையிலும் அடைந்தே தீருவார்கள். புகழ்ச்சியை விரும்பும் இவர்கள் எதையும் எல்லோரையும் எளிதாக நம்பி விடுவார்கள். அதிர்ஷ்ட தேதிகள்: வெள்ளிக் கிழமையுடன் 4, 8, 13 ,17 ,26 ,31 ஆகிய தேதிகள் இணைந்திருக்கும் இந்த நாட்களில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும். சனிக்கிழமை பிறந்தவர்களின் பலன்கள்: இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலி என்றே சொல்லலாம். தூங்கினால் கும்பகர்ணன், எழுந்து நின்றால் இந்திரஜித் போன்றவர்கள். சோம்பலும், தள்ளிப்போடுவதும் இவர்களது பிறவிக்குணம். எதிலும் ஒரு அலட்சியப் போக்கு எதைப் பற்றியும் கவலைப்படாத மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள். வேலை என்று வந்து விட்டால் அதை முடித்து விட்டு மற்ற வேலைகளைத் துவங்குவார்கள். எப்பொழுதும் தான் உண்டு தன் வேலை உண்டு என நினைப்பவர்கள். அதனாலேயே இவரைப் பலரும் விரும்புவார்கள். அதிர்ஷ்ட தேதிகள்: சனிக்கிழமையுடன் 8, 17, 26 ஆகிய தேதிகள் இணைந்திருக்கும் இந்த நாட்களில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
Nandhinipriya Ganeshan July 07, 2023
குழந்தை பிறப்பதே அதிர்ஷ்டம் தான். அது எந்த கிழமையில் பிறந்தால் என்ன? என்று தோன்றலாம். பொதுவாக, குழந்தை எந்த ராசி, எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளதோ அதை வைத்து அந்த குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை சொல்ல முடியும். அதுபோல தான் கிழமையும். ஒரு குழந்தை எந்த கிழமையில் பிறக்கிறதோ அந்த கிழமைக்கு உண்டான பலன்கள் நிச்சயம் அந்த குழந்தைக்கு கிடைக்கும் என்பதே ஐதீகம். ஏனென்றால், ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கடவுளுக்கு தொடர்புடையவை. அதனால், எந்த கிழமையில் குழந்தை பிறக்கிறதோ அந்த கடவுளின் பலனை பெறுவார்கள். தற்போது, எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்று பார்க்கலாம். ஞாயிற்றுக் கிழமை: ஞாயிற்றுக் கிழமைக்கு உரிய தெய்வம் சூரியன். இந்த கிழமையில் பிறக்கும் குழந்தை செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். குறிப்பாக வாழ்க்கையில் 40, 45 வயதிற்கு மேல் நல்ல பேரும் புகழும் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்வார்கள். மேலும், ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை மட்டும் தான் செய்வார்கள். அதேப்போல், எதிலும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். திங்கள் கிழமை: திங்கள் கிழமைக்கு உரிய தெய்வம் சந்திரன். அதனால் திங்கள் கிழமையில் குழந்தை பிறந்தால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வார்கள். ஒரு முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றி மட்டுமே பெறுவார்கள். அதேபோல், திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் சந்திரனை போல அழகான தோற்றத்தை கொண்டிருப்பார்கள். தன்னுடைய வசீகரமான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர்ந்திடுவார்கள். நண்பர்களுடன் இருப்பதையே அதிகம் விரும்புவார்கள். உதவி என்றால் ஓடிச் சென்று உதவி செய்வார்கள். செவ்வாய் கிழமை: செவ்வாய் பகவானுக்கு உரிய கிழமையாக விளங்கும் செவ்வாயில் பிறந்த குழந்தை, தனது வாழ்க்கையில் கடுமையான உழைப்பினாலும் சொந்த முயற்சியாலும் முன்னேற்றம் அடையக் கூடியவர்களாக இருப்பார்கள். உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்ற பெருமையையும் பெறுவார்கள். யாருடனும் வம்பு வழக்கும் செய்ய மாட்டார்கள், ஆனால் வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். அதனால் இவர்களுடன் பேசும்போது கவனத்தோடே பேச வேண்டும். அடிக்கடி கோபப்பட்டாலும், அனைவரிடமும் அன்பாக பழகும் குணமுள்ளவர்கள். புதன் கிழமை: புதன் கிழமைக்கு உரிய கிரகம் புதன். இந்த கிழமையில் பிறந்தவர்கள் ஏதேனும் ஒரு துறையில் சிறப்பு வாய்ந்தவராக திகழ்வார்கள். அதேபோல், எப்போதும் எதையாவது எழுதி கொண்டும், படித்து கொண்டும் இருப்பார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் படிப்பாலியாகவும் திறமைசாலியாகவும் இருப்பார்கள். ஒரு விஷயம் தேவையில்லை என்றாலும் கூட அதை அறிந்துக்கொள்ளும் ஆர்வம் படைத்தவராக இருப்பார்கள். இயற்கையாகவே கொஞ்சம் கூச்சசுபாவம் உடைய இவர்கள் நண்பர்களைகூட தேர்ந்தெடுத்துதான் பழகுவார்கள். ஆனால், நண்பனுக்காக எதையும் செய்யக் கூடியவர். வியாழக்கிழமை: குரு பகவானுக்கு உரிய கிழமையாக வியாழன் இருக்கிறது. இந்த கிழமையில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு மதிக்கும் குணப்படைத்தவராக இருப்பார்கள். மற்றவர்களுக்காக தங்களுடைய வாழ்க்கையையும் தியாகம் செய்துக் கொள்வார்கள். அதேபோல், நன்னெறிக்கு இருப்பிடமாக திகழும் இவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளில் அவ்வளவு சீக்கிரமாக சிக்கிக்கொள்ள மாட்டார்கள். இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்தையும் தெரிந்துக் கொள்ளும் திறமை இவர்களிடம் இருக்கும். இதனாலேயே இவரை சிலர் கர்வம் பிடித்தவர்கள் என்றும் சொல்வார்கள். எதிர்கால வாழ்க்கையை தெளிவாக திட்டமிடுவதில் திறமைசாலி. இதுவே அவருடைய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். வெள்ளிக் கிழமை: சுக்கிரனுக்கு உரிய கிழமையாக வெள்ளி திகழ்கிறது. இந்த கிழமையில் பிறந்தவர்கள் வாழ்க்கை வாழ்வதற்காகவே என்று சகல சுகங்களையும் அனுபவிக்கக்கூடியவர்கள். அதனால், மனதில் என்ன நினைக்கிறார்களோ அதை எப்பாடுபட்டாவது அடைந்தே தீருவார்கள். கடினமாக உழைத்து சம்பாதித்தாலும் அவையனைத்தும் மற்றவர்களையே போய் சேரும். இவர்களுக்கு புகழ்புவர்களை கண்டால் மிகவும் பிடிக்கும். அதனால், எளிதில் மற்றவர்களை நம்பிவிடுவார்கள். வெள்ளிக்கிழமையில் பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் வளர வளர செல்வம் பெருகும். சனிக்கிழமை: சனி பகவானுக்கு உரிய கிழமையாக இருக்கும் சனிக்கிழமையில் பிறந்தவர்களுக்கு அதிகளவு சமயோஜித புத்தி இருக்கும். ஒரு முயற்சியில் ஈடுபடாதவரை சோம்பேறியாக இருப்பார்கள். ஆனால், முயற்சியில் இறங்கிவிட்டால் ஜெயித்தே தீர வேண்டும் கடினமாக உழைக்கக் கூடியவர்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். அனைவரிடமும் அன்பாக பழகும் குணப்படைத்தவர் என்பதால் இவரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதுவே இவர்களின் தனித்துவம்.
Nandhinipriya Ganeshan July 04, 2023
நம்மில் பலரும் பல முயற்சிகள் செய்து ஒரு விஷயத்தை ஆரம்பித்து ஏதாவதொரு காரணத்தினால் காரியம் பாதியில் நின்று விடும் அல்லது முடிக்கும் தருணத்தில் தடைபட்டு போகும். எடுத்துக்காட்டாக, திருமண தடை, குழந்தை தடங்கல், வேலை கிடைப்பதில் தடங்கல், சொந்த வீடு கட்டுவதில் தடங்கல் அல்லது புதுத்தொழில் தொடங்குவதில் தடங்கல் என்று அடுக்காக சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு முக்கிய காரணம் சர்ப்ப தோஷம் என்றழைக்கப்படும் ராகு கேது தோஷம் தான். ஜோதிட ரீதியாக சர்ப்ப தோஷம் என்பது மிக முக்கியமான ஒரு தோஷம் ஆகும். ராகு கேது எந்த இடத்தில், எந்த கிரகங்களுடன் உள்ளதோ அந்த கிரகங்களை தன் வசம் செய்து விடும் ஆற்றல் பெற்றவை. ராசி அதிபதியை, நட்சித்திர அதிபதியை என அனைத்தையும் தன் வசம் செய்து கொள்ளக் கூடியவை. மேலும் தன்னை பார்க்கும் கிரகங்களையும் தன் வசம் செய்து விடும் வல்லமை பெற்றது தான் இவ்விரு கிரகங்களும். இதனால் யதார்த்தமாக நம்முடைய தினசரி வாழ்வில் நடக்க வேண்டிய பல விஷயங்களில் பிரச்சனைகளை தரக்கூடியது. எனவே, ராகு கேதுவுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை கூறி வருவதன் மூலம் அவற்றின் பாதிப்பில் இருந்து எளிதில் தப்பித்துக் கொள்ளலாம். ராகு காயத்ரி மந்திரம்: ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம அஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரசோதயாத் கேது காயத்ரி மந்திரம்: ஓம் அஸ்வத்வஜயா வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தன்னக் கேதுஹ் ப்ரசோதயாத் எப்படி சொல்ல வேண்டும்? உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோயிலில்களில் உள்ள நவக்கிரக சன்னதிக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குள்ளாக சென்று, ராகு பகவானுக்கு சிவப்பு நிற மலர்கள் சமர்ப்பித்து, கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுப் பதார்த்தத்தை நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணை தீபம் ஏற்றி ராகு பகவானுக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 அல்லது 1008 முறை துதிக்க வேண்டும். அதேபோல், கேது பகவானுக்கும் சனிக்கிழமைகளில் காலை 7 லிருந்து 8 மணிக்குள்ளாக சென்று, மலர்கள் சமர்ப்பித்து, கொள்ளு நைவேத்தியம் வைத்து, நெய்தீபம் ஏற்றி கேது பகவான் காயத்ரி மந்திரங்களை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் கேது பகவானின் தோஷம் நீங்கி வாழ்வில் நன்மைகள் உண்டாகும். இந்த பரிகாரத்தை குறைந்தபட்சம் 9 வாரம் முதல் அதிகபட்சம் 27 வாரம் வரை செய்தால் மட்டுமே முழுமையான பலனைப் பெற இயலும்.
Nandhinipriya Ganeshan July 02, 2023
ஜோதிடத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுவது நட்சத்திரங்கள் தான். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு பலம் அதிகம். அந்தவகையில், மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த 27 நட்சத்திரங்களுக்கும் 27 நட்சத்திர அதிதேவதைகள் உள்ளன. அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்று ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றிய தகவலை பார்க்கலாம். 27 நட்சத்திர தேவதை: 1. அஸ்வினி - சரஸ்வதி தேவி 2. பரணி - துர்கா தேவி 3. கார்த்திகை - முருகப்பெருமான், அக்னி 4. ரோகிணி - கிருஷ்ணன், பிரம்மா 5. மிருகசீரிஷம் - சந்திரன் 6. திருவாதிரை - சிவபெருமான் 7. புனர்பூசம் - ராமர், அதிதி 8. பூசம் - பிரஹஸ்பதி, தட்சிணாமூர்த்தி 9. ஆயில்யம் - ஆதிசேஷன் 10. மகம் - சூரிய பகவான் 11. பூரம் - ஆண்டாள் 12. உத்திரம் - மகாலட்சுமி 13. அஸ்தம் - காயத்திரி தேவி 14. சித்திரை - சக்கரத்தாழ்வார் 15. சுவாதி - நரசிம்மமூர்த்தி 16. விசாகம் - முருகப்பெருமான் 17. அனுசம் - லட்சுமி நாராயணர் 18. கேட்டை - வராஹ பெருமாள் 19. மூலம் - ஆஞ்சநேயர் 20. பூராடம் - ஜம்புகேஸ்வரர் 21. உத்திராடம் - விநாயகப் பெருமான் 22. திருவோணம் - ஹயக்ரீவர் 23. அவிட்டம் - அனந்த சயனப் பெருமாள் 24. சதயம் - மிருத்யுஞ்ஜேஸ்வரர் 25. பூரட்டாதி - ஏகபாதர் 26. உத்திரட்டாதி - மகா ஈஸ்வரர் 27. ரேவதி - அரங்கநாதன்
Nandhinipriya Ganeshan June 23, 2023
எல்லா வீடுகளிலும் இருக்கும் ஒரு உயிரனம் தான் பல்லி. இந்த பல்லிகள் வீட்டின் சுவர்களில் இருப்பதோடு, அவ்வப்போது நம்மீது விழுந்து உயிரே போகும் அளவுக்கு பயத்தை கொடுக்கும். அப்படி நம் மீது விழுவதால் சாஸ்திர விதிகளின் படி நற்பலன்களும் உண்டு, கெடு பலன்களும் உண்டு. இந்த பலனாது பல்லி உங்களின் மீது விழுந்த நாளிலிருந்து ஏழு நாட்கள் தொடர்ந்து இருக்கும். அந்தவகையில், பல்லி நம் உடல் மீது விழும் இடங்கள் வைத்து நமக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றியும், அப்படி பல்லி விழுந்தால் ஏற்படும் தோஷத்தை போக்கும் பரிகாரத்தை பற்றியும் இங்கு விரிவாக பார்ப்போம். பல்லி விழும் பலன்கள்: ➥ பல்லி நம்முடைய தலையின் இடது பக்கம் விழுந்தால் ஏதேனும் துன்பம் வரும். அதுவே வலது பக்கம் விழுந்தால் கலகம் நடக்கும் என்று சொல்வார்கள். ➥ நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி, வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்று சொல்வார்கள். ➥ கண்ணின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் தரும் செய்தி உங்களை தேடி வரும். அதுவே வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகமான செய்தி வந்து சேரும். ➥ மூக்கின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் கவலை அதிகரிக்கும். மூக்கின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய்கள் வரும். ➥ காதின் இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும். அதுவே வலது காதின் மீது பல்லி விழுந்தால் ஆயுள் கூடும் என்று சொல்வார்கள். ➥ மார்பின் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும். வலது மார்பு பக்கம் பல்லி விழுந்தால் லாபம் வரும். ➥ பாதம் இடது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். பாதம் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும். ➥ கழுத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை உண்டாகும். கழுத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும். ➥ தோளின் இடது பக்கம் விழுந்தால் யோகம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி தேடி வரும். ➥ வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி உண்டாகும். வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம் சேரும். ➥ முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாபாரத்தில் நஷ்டம் வரும். முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை தரும் செய்தி வரும். ➥ கபாலத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். கபாலத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கதனம் வரும். ➥ இடது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். வலது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் பீடை உண்டாகும். ➥ இடது கை விரல் மீது பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது கை விரல் மீது பல்லி விழுந்தால் சன்மானம் கிடைக்கும். ➥ கணுக்காலின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம் செய்ய நேரிடும். கணுக்காலின் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு வரும். ➥ நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும். நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு உண்டாகும். ➥ தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் தரும் செய்தி வரும் அல்லது துக்க சம்பவம் நடைபெறும். ➥ இடது கை மீது பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். வலது கை மீது பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். பல்லி விழும் பலன் பரிகாரம்: பல்லி நம்முடைய உடம்பில் ஏதாவது ஒரு பகுதியில் விழுந்து விட்டால் உடனே பயப்பட வேண்டாம். உடனே தலைக்கு குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கிவிட்டு வாருங்கள். கோவிலுக்கு போக முடியாவிட்டால் வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்றி குல தெய்வத்தை வணங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பல்லி விழுவதால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
Nandhinipriya Ganeshan June 21, 2023
பொதுவாக, திருமணம் என்றாலே பத்து பொருத்தம் பார்த்து தான் செய்து வைப்பார்கள். அவற்றில் ராசி பொருத்தமும் முக்கியமான ஒரு பொருத்தமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பொருத்தமான இரண்டு ராசிகள் சேரும்போது அவர்களின் இல்வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் இல்லாமல், மகிழ்ச்சிகரமான சிறப்பானதாக இருக்கும். அந்தவகையில், எந்த ராசி ராசியுடன் பொருந்தும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற ராசிகள் பொருந்தாது. திருமண ராசி பொருத்தம்: ➥ மேஷம் – சிம்மம், விருச்சிகம், தனுசு, மிதுனம், மகரம், துலாம் ➥ ரிஷபம் – கடகம், கன்னி, மகரம், மீனம் ➥ மிதுனம் – தனுசு, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் ➥ கடகம் – மகரம், ரிஷபம், சிம்மம், மீனம் ➥ சிம்மம் – மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் ➥ கன்னி – துலாம், மீனம், ரிஷபம், கடகம், மகரம் ➥ துலாம் – மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம் ➥ விருச்சிகம் – கடகம், கன்னி, ரிஷபம், சிம்மம், மீனம் ➥ தனுசு – மிதுனம், சிம்மம், மேஷம், துலாம், கும்பம் ➥ மகரம் – கடகம், ரிஷபம், கன்னி, மீனம், விருச்சிகம் ➥ கும்பம் – சிம்மம், மேஷம், மிதுனம், கன்னி, துலாம் ➥ மீனம் – ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், கன்னி